Friday, April 19, 2024

மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு

பெற்றோரைப் பேணவேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு உரைகள் ஆற்றப்பட்டிருந்தாலும் பெற்றோரைப் பேணுதல் என்ற அத்தியாயம் என்றைக்குமே பேசப்பட வேண்டியதொன்றாகவே இருந்து வருகின்றது. பெற்றோரைக் கவனிக்;க வேண்டும் என்று சொல்லப்பட்டதுமே நம்மில் பலருக்கு நினைவில் வருவதெல்லாம் ‘நான் என் தாய் தந்தையருக்கு மாதாந்தம் 5000 ரூபாய் பணம் கொடுத்து வருகிறேன்ள. எனது மனைவிக்குக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்குக் கொடுக்க நான் தவறுவதில்லைள. அவர்களின் மருந்துச் செலவீனங்களை நானே பொறுப்பேற்றுள்ளேன்’ என்பதுதான். ‘பெருநாள் தினமானால் தாய்க்குச் சேலை எடுத்துக் கொடுப்பதும், தந்தைக்கு சாரம், சட்டை வாங்கிக் கொடுப்பதும் பெற்றோரைக் கவனித்தலுக்கு அடையாளமாகப் பலராலும் பார்க்கப்படுகின்றது. பெற்றோரைக் கவனித்தல் பற்றிய அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முன்வைக்கும் போதெல்லாம் மேற்செல்லப்பட்ட சில விடயங்களை வைத்து தம் பெற்றோரைத் தாம் கவனித்து விட்டதாக பலரும் திருப்தி கண்டு விட்டதால் பெற்றோரைக் கவனித்தல் என்றால் என்ன என்பது பற்றி இஸ்லாம் கூறும் பெரும் பகுதியொன்று மறைந்து போயுள்ளது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டு விட்டது.

அல்குர்ஆனையும், ஹதீஸையும் ஆராய்ந்து பார்க்கும் போது ‘பெற்றோருக்கு உணவு, உடை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. மனைவிக்கு உணவு கொடுக்க வேண்டும், உடை கொடுக்க வேண்டும், இருப்பிடம் கொடுக்க வேண்டும், என்றுதான் அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே உணவு, உடை, வீடு கொடுப்பதுதான் ‘கவனித்தல்’ என்பதற்கு அடையாளம் என்றால் மனைவியைத்தான் அல்லாஹ் கூடுதலாகக் கவனிக்கச் சொல்லியுள்ளான் என்று நாம் கூறவேண்டியாகிவிடும். எந்தளவுக்கென்றால் ஒருவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் இத்தாக்காலம் முடியும் வரை உணவு, உடை ஆகியவற்றுக்கு அவரே பொறுப்பென்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. விவாகரத்து என்பது கணவன் மனைவிக்கிடையிலான அன்புப் பாலம் உடைவதால் ஏற்படுவதாகும். கணவன், மனைவிக்கிடையிலான அன்பு தகர்ந்த பின்னாலும் மனைவிக்கு உணவு, உடை கொடுக்கச் சொல்லி இஸ்லாம் பணிக்கின்றது என்றால் அன்பிற்கும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை வழங்குவதற்கும் அடிப்படையில் சம்பந்தம் கிடையாதென்பது தெளிவாகின்றது. ஆனால் அதிகமானோர் பெற்றோரைக் கவனித்தல் என்றால் இதைத்தான் விளங்கி வைத்துள்ளனர். கவனித்தல் என்பதற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் என்பதே அர்த்தமென்றால், தன் மனைவிக்கே செலவு செய்ய சக்தியற்ற ஓர் ஏழை, தன் பெற்றோரைக் கவனிப்பது எவ்வாறு? என்ற கேள்வியெழுகிறது. எனவே கவனித்தல் என்ற விடயத்தை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘வாழ்வில் சந்தோசம் ஏற்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தைத் திரட்டவேண்டும்’ என நம்மில் பலர் நினைக்கின்றனர். பொருளாதாரமில்லாது வாழ்பவன் தன்னிடம் எதுவுமில்லை என்றுதான் நினைக்கின்றான். பொருளாதாரம் வாழ்க்கையில் அவசியம் என்பதற்காக பொருளாதாரம்தான் வாழ்க்கை என்றாகிவிட முடியாது. அவ்வாறானதொரு விதியை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இவைகளைத் தாண்டி, ‘இவ்வுலகில் பெறுமதி மிக்கதும், விலைமதிப்பற்றதுமான ஒன்றிருக்குமாயின் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்புதான்  எனக் கூறலாம். வசதி படைத்தவர் மீதும், தனக்கு உதவி செய்தவர் மீதும், கௌரவமாக இருக்கும் ஒருவர் மீதும் ஒருவருக்கு அன்பு ஏற்படலாம். இத்தகைய அன்பு இயல்பானதன்று, உள்நோக்கமுடையது, நோக்கம் நிறைவேறியதும் கானல் நீர் போன்று மறையக்கூடியது. வசதிபடைத்தவரைச் சுற்றி வட்டமிடும் சந்தர்ப்பவாத ரெயில் சினேகிதர்களைப் பார்க்கின்றோம். பணமும், பதவியும் அவரிடமிருந்து கரைந்து போகவே இவர்களும் மெல்ல மறைந்து விடுகின்றனர். ஆகவே இத்தகைய அன்பு எவ்வகையிலும் பெருமானமில்லாதது. ஆனால் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்பு என்பது மிகப்பெறுமதிவாய்ந்ததாகும். அதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ  الأنفال : 63 
அவர்களின் உள்ளங்களிடையே அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ளஅனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன் ஞானமிக்கவன். (அல்அன்பால் : 63)

எனவே அன்பென்பது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுவதாகும். ஒருவர் இன்னொருவருக்கு மிகப்பெரும் அறியாயம் செய்து விட்டார் அதனால் அநியாயமிழைக்கப்பட்ட அம்மனிதரின் வாழ்வே இருண்டுவிடுகிறது. பின்னர் தான் செய்த தவறை வருந்தி அநியாயம் செய்த அம்மனிதர் அநியாயமிழைக்கப்பட்டவருக்கு பெரும் தொகைப் பணம் கொடுக்கின்றார். தனக்கேற்பட்டுள்ள வறுமைக்காக அவ்வுதவித்தொகையை அவர் பெற்றுக் கொண்டாலும் அவரின் உள்ளத்தில் அன்பு ஏற்படப்போவதில்லை.

தன்னை யாரவாவது விமர்சிக்கும் போது ‘எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் அது பற்றி எனக்குக் கணக்கில்லை’ என்று சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் விமர்சிப்பவரிடம் இவர்களுக்கு எவ்விதத் தேவையுமில்லை என்பதுவே. அதேவேளை தனக்கு உதவி செய்யும் ஒருவர் தன்னைப் பற்றி விமர்சித்துள்ளதைக் கேட்டால் ‘ஏன் விமர்சித்தார்? எதற்காக விமர்சித்தார்? என்று இவர்கள் ஆதங்கத்தில் கேட்பார்கள். விமர்சித்தவரிடம் தாம் தேவையுடையோராக இருப்பதனாலேயே இவ்வாறு இவர்கள் நிலைமாறுகின்றனர். போலியான அன்பின் மாதிரிவடிவங்களுக்கு இது போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்னொருவரிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அன்பானது அல்லாஹ் நமக்கேற்படுத்தியிருக்கும் அருட்கொடையெனலாம். நாம் கேட்காமல், எவ்வகையிலும் நாடாமல் இவ்வாறான அன்பு நமக்குக் கிடைக்குமென்றால் அது வார்த்தைகளால் அளவிடமுடியாததும், பெறுமானம் கணிக்க முடியாததுமாகும். அவ்வாறு தம் உயிரிலும் மேலாக நம்மை நேசிக்கும் ஓருறவு இவ்வுலகில் இருக்குமானால் அது நம் தாயும், தந்தையும்தான். வேறுயாருமில்லை. நம்மிடமிருந்து கிடைக்கும் நலவுகளை, இலபாங்களைக் கணக்கிடாது நம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து தம் அன்பைச் சொரியும் ஓருறவிருக்குமானால் அது நம் தாய், தந்தை மட்டுமே. ஆனால் நம்மிடம் பெறுமானமிழந்து காணப்படுவதும் இந்த அன்புதான். இலவசமாய்க்கிடைப்பதற்கு நம்மிடம் மதிப்பில்லையென்பதால் இலவசமாகக் கிடைக்கும் தாய், தந்தை அன்புக்கும் நம்மிடம் மதிப்பில்லை. அதனால்தான் நம் மீது அன்பைச் சொரியும் அவர்களிருவரின் உணர்வுகளை நாம் மதிப்பதில்லை. நம் வர்த்தகப் பங்காளிகள் மீது நமக்கிருக்கும் சந்தர்ப்பவாத அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும், சுயலாபம் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே நம்மை நேசிக்கும் தாய், தந்தையினரின் அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும் பாரிய பாகுபாடுகள் காணப்படுகின்றன. பெற்றோரின் அந்தஸ்தை முறையாகப் புரியாமைதான் இப்புறக்கணிப்புக்களுக்குக் காணரமாகின்றது. ஆகவே பெற்றோரின் பெறுமதியை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் முக்கியமான நான்கு அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு அம்சங்களுக்குள்ளும் பெற்றோரைக் கவனித்தல் என்பது முழுமையாக உள்ளடங்கியிருக்கின்றது. இவற்றை சரியாக விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் பெற்றோரைப் பேணல் என்ற அத்தியாயத்தை முறையாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் அம்சம்

நாமனைவரும் மறுமையை நம்பியவர்கள். அந்த மறுமையில் நம் நன்மைத் தட்டுப் பாரமானதாகவும், தீமைத் தட்டுப் பாரம் குறைந்ததுமாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். எவ்வளவுதான் பணத்தை வாரி இரைத்தாலும் நன்மை, தீமை தாராசுகளில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது என நம்புகிறோம். ஆகவே இவ்வுலகில் ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்ற ஏகத்துவத்துக்கு அடுத்ததாக மிகச் சிறந்த நட்காரியமொன்று இருக்குமானால் அது தாய், தந்தையரைப் பேணுதலே.  பின்வரும் ஹதீஸை அவதானியுங்கள்.

صحيح البخاري 527 – قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். இறைவழியில் அறப்போர் புரிதல்என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி)
ஆதாரம் : புஹாரி 527

அல்லாஹ்வின் பாதையில் போராடல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் எனும் நற்காரியம், நன்மைத் தட்டில் பாரமானதாகும். மற்றைய நற்கருமங்களைச் செய்து தேடும் நன்மைகளைக் காட்டிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் பன்மடங்காகும்.ஈஸா நபியவர்களைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا  مريم : 31 ، 32
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (மர்யம் : 31- 32)

தாய்க்கு உபகாரம் செய்வதன் சிறப்பை சூசகமாக இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது. நமது நன்மைத்தட்டில் பாரம் அதிகரிக்க இதைப் போன்று வேறெதுவும் இல்லையெனலாம்.

ஒருவர் ஒரு முஃமினைக் கொலை செய்து, ஆட்சியாளர்களை விட்டும் மறைந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அவருக்கு மன்னிப்புண்டு ஆனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இதில் முரண்பட்டிருந்தார்கள். இவ்வாறு கொலை செய்தவருக்கு இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இக்கருத்தை பிழை கண்டார்.

ஒரு முறை ஒரு நபர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்து ‘நான் ஒருவரைக் கொலை செய்து விட்டேன். எனக்குப் பாவமன்னிப்புண்டா? எனக் கேட்டார். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘உமக்குப் பாவமன்னிப்பில்லை’ என்று அவரிடம் கூறினார். அதைக் கேட்டதும் அந்நபர் சென்று விடுகிறார். என்றாலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்  மீண்டும் அந்நபரையழைத்து ‘உம் பெற்றோர் உயிருடனுள்ளனரா?’ என விசாரித்தார்கள். அதற்கவர் ‘ஆம்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘உம் பெற்றோருக்கு நீர் நன்மை செய்யும் சில வேளை அதனால் உன் பாவம் மன்னிக்கப்படலாம்’ என்று அவரிடம் கூறினார்கள். ஒரு முஃமினைக் கொலை செய்தவனுக்கு பாவ மன்னிப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மாறுவதற்குக் காரணமே பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் காணப்படும் அளவிட முடியாத நன்மைகள்தான்.

குகைவாசிகளின் செய்தியிலும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதுவே முதலாவதாக இடம் பெறுகின்றது. அதை வைத்தே அம்மூவரில் முதலாமவர் தன் பிராத்தனையைத் துவங்குகிறார். அந்த செய்தி கீழ் வருமாறு இடம் பெற்றுள்ளது.

صحيح البخاري 2215 – عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَتَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ

‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றனர்.அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்துஎனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகும்) இடைவெளி உண்டானது.

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்குஎனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்குஎனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 2215

எனவே தாய், தந்தைக்குத் தான் செய்த நலவை வைத்து அல்லாஹ்விடம் பிராத்தித்த போது கற்பாறை விலகியது என்பதிலிருந்து பெற்றோரைப் பேணுவதின் சிறப்பும், அவசியமும் தெளிவாய் தெரிகின்றது.

நமது வாழ்வில் இவ்வாறான ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டாலும் இக்குகை வாசியைப் போன்று நாமும் நம் பெற்றோருக்கு நன்மைகள் பல செய்திருப்போமாயின் அவற்றை வைத்து நமக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கக் கோரி அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாயின் நமது கஷ்டங்கள் நீங்குவதற்கான வாய்ப்புக்களுள்ளன.

தன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன்மைகள் செய்வதன் மூலம் ஒருவன் சுவனம் செல்லவில்லையாயின் அவனுக்கு நாசம் உண்டாகட்டும் என நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு செய்தி

صحيح البخاري 2466 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي فَنَزَلَ الْبِئْرَ فَمَلَا خُفَّهُ مَاءً فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا يَا رَسُولَ اللَّه وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا فَقَالَ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ

ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டுஎன்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 2466

தனக்கு நலவேதும் செய்யாத ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டியதற்கு அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்தான் என்றால் நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய நம் தாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீரை நாம் புகட்டினால், அவருக்கு சாப்பாடு கொடுத்தால், அவர் உறங்கும் இடத்தை சுத்தம் செய்தால், அவரோடு பேசி மகிழ்ந்தால் இவற்றிலிருக்கும் கூலிதான் எம்மாத்திரம்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு பூனையைக் கட்டிப் போட்டதற்காக ஒரு பெண் நரகம் நுழைந்தாள் என்றால் நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நாம் நோவினை செய்தால் அதற்கு எத்தகைய தண்டனைகள் நமக்குக் கிடைக்கப் போகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே பெற்றோரை கண்ணியப்படுத்துவது மகிழ்விப்பது போன்றனவற்றில் அளவிலா பிரதிபலன்களுள்ளன என்பதை நாம் விளங்க வேண்டும். நம் தாய், தந்தையர் எதையாவது நம்மிடம் வேண்டினால் அவர்களை மகிழ்விக்க என்ன செய்யலாம் என்ற ஆதங்கம் நம்மிடம் காணப்படுமாயின் அதனால் நாம் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவர்களாகின்றோம்.  இதை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

1899 – حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ [ص:311] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»
[سنن الترمذي ت شاكر 4/ 310]
தாய், தந்தையரின் பொருத்தமே அல்லாஹ்வின் பொருத்தமாகும். அல்லாஹ்வின் கோபம் அவர்களிருவரின் கோபத்திலுள்ளது. திர்மிதி

எனவே நம் பெற்றோருக்கு நாம் செய்கின்ற ஓர் அற்ப காரியத்திலும் இமாலயக் கூலி நமக்கிருக்கின்றது என்பதை நாம் இதயத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது அம்சம்

தாய், தந்தையரைப் பேணுவதில் அடுத்த படியாக நாம் கவனிக்க வேண்டிய மற்றோர் அத்தியாயம் எதுவெனில், அவர்களிருவரையும் நாம் மதிக்க வேண்டிய விதமும், முறையுமாகும்.ஒரு நபருடன் நாம் பழகுவதால் துர்நடைத்துக்கு நாம் ஆட்பட்டுவிவோம், மார்க்கத்தை விட்டு வழிதவறி விடுவோம், நடத்தை பிறழ்வில் விழுந்து விடுவோம் போன்ற நிலைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமாயின் அந்நபரை மார்க்கத்துக்காக வெறுக்கலாம். அவரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வரையில் நமக்கும், அவருக்குமிடையிலுள்ள இடைவெளி தொடரலாம். ஆனால் உலக விடயங்களில் ஒருவரோடு நாம் கோபித்துக் கொண்டால் மூன்று நாட்களுக்கு மேலாக பகை தொடரக் கூடாது. இவை ஏனையவர்களோடு நாம் பழகுவதில் கைக்கொள்ள வேண்டிய பொதுவான சில விதிகளாகும்.

ஆனால் நம் பெற்றோர்களைப் பொறுத்த மட்டில் உலக விடயங்களுக்காக மட்டுமன்றி மார்க்க விடயங்களுக்காகக் கூட அவர்களை நாம் பகைக்க முடியாது.

அவர்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது என்றால் ‘நீங்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது;  என்னால் இதை ஏற்க முடியாது. எனது கொள்கைதான் சரியானது’ என்று முறையாக உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களைப் பகைக்க முடியாது. அல்லாஹ் இதை நேரடியாகவே கூறிக்காட்டுகின்றான்.

وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا لقمان : 15
உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் (லுக்மான் : 15)

பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும். அதையே ஒருவர் கட்டாயப்படுத்தினால் அது அதைவிடக் கொடியதாகும். இத்தகையதை நம் பெற்றோர் செய்தாலும் அவர்களை வெறுக்காது, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்ளுமாறு அல்லாஹ் பணித்துள்ளான்.

பெற்றோருக்கு தாம் செய்யும் செலவைக் குறைப்பதற்காக கொள்கையைக் காரணம் காட்டிப் பெற்றோரைப் பகைத்தவர்கள் நம்மில் பலருண்டு. இதற்குக் ‘கொள்கை உறுதி’ என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இதே வெறுப்பை தவறான கொள்கையிலிருக்கும்  தம் நண்பர்களிடம் காட்டமாட்டார்கள். இன்னும் சிலர், தாம் பெற்றோரை மதிக்கின்றோம் என்று கூறி, பெற்றோர் செய்யும் தவறுகளையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு வாழ்கின்றனர். தாயைப் புண்படுத்தக் கூடாது எனக் கூறி தாய் சொன்னதற்காக சீதனம் வாங்குகின்றனர். இவர்களிடம் கேட்டால் ‘என்னதான் செய்யலாம்? என் பெற்றோருக்கு நான் மட்டுமே பிள்ளை. அவர்களின் மனங்களை நான் புண்படுத்தலாமா?’ என்று விளக்கம் சொல்கின்றனர். தமக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தம் பெற்றோர் திருமணம் செய்யச் சொன்னால் இவர்கள் அவ்வாறு செய்வார்களா? என்பதை ஒரு கனம் நாம் சிந்திக்க வேண்டும். தாயும், தந்தையும் வழிகேட்டிலிருந்தால் அவர்களைத் திருத்த வேண்டும். அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வேண்டும் என்ற கவலையே உண்மையில் இச்சந்தர்ப்பத்தில் ஒரு முஃமினுக்கு ஏற்பட வேண்டும்.

பெற்றோர் தவறான வழியிலிருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதற்கான சில செய்திகளைத் கீழே அவதானியுங்கள்.

صحيح البخاري 2620 – عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ
இஸ்லாத்தை ஏற்காது, இணை வைப்பவராகவிருந்த எனது தாய் நபியவர்கள் காலத்தில் என்னிடம் வந்தாள். (என்னோடு உறவாட) என் தாய் விரும்புகிறாள், அவளோடு நான் சேர்ந்து வாழவா என நபியவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்புக் கேட்டேன். ஆம் நீ அவளோடு நேர்ந்து நடஎன்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸமா பின்த் அபீபக்ர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 2620

ஒரு நபித் தோழர் இஸ்லாத்தை ஏற்றதும் அதை விரும்பாத அவருடைய தாய் ‘நீ இஸ்லாத்தை விடும் வரை நான் உண்ணவும் மாட்டேன். குடிக்கவும் மாட்டேன்’ என்று அவரிடம் சபதமிடுகிறார். தாயைப் பார்ப்பதற்காக அவர் வரும் போதெல்லாம் தன் தாயின் உடல் மென்மேலும் பலவீனமாவதைக் காண்கிறார். அப்போது அந்நபித் தோழர் தன் தாயிடம் ‘இவ்வாறு ஆயிரம் முறைதான் உங்களுக்கு நடந்தாலும் ஒரு போதும் நான் இஸ்லாத்தை விடமாட்டேன்’. என்று கூறினார்.தன் கொள்கையைத் தெளிவாகச் சொன்ன இந்நபித்தோழர் தன் தாயின் மீதான பாசத்தை விடவில்லை என்பதை இச்சம்பவத்தில் தெளிவாகக் காணலாம்.

நபியவர்களின் தாயார் இஸ்லாத்தை இணைவைப்பில் மரணித்தார்கள். நபியவர்களை இது பெரிதும் வருத்தியது. அந்த செய்தி கீழுள்ளவாறு இடம் பெறுகிறது.

صحيح مسلم 2303 – عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-  اسْتَأْذَنْتُ رَبِّى أَنْ أَسْتَغْفِرَ لأُمِّى فَلَمْ يَأْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِى

என் தாய்க்குக் பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதிக்கவில்லை. அவரின் கப்ரைத் தரிசிக்க அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதித்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 2303

ஆகவே மார்க்கத்துக்காகவேனும் பெற்றோரைப் பகைக்கக்கூடாது என்பதை நாம் சாரம்சமாக விளங்கவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் மார்க்கத்துக்காகப் பெற்றோரைப் பகைக்கமாட்டர். மார்க்க ரீதியாக தாயிடம் தவறு காணப்பட்டால் ‘நான் கூறி இதை அவர் கேட்கமாட்டார்’ என்று சாட்டுச் சொல்லி, கண்டும் காணாதது போல் இருப்பர். அதே நேரம் சொத்துப் பங்கீட்டில் தனக்கு ஏதாவது குறையேற்பட்டால் ‘இவரெல்லாம் ஒரு தந்தையா? நீதியாகவல்லவா பிரிக்க வேண்டும்?’ என்று போர்க் கொடி ஏந்தி விடுவர். ஆகவே எங்கெல்லாம் நாம் பெற்றோருடன் கொஞ்சம் கடுமையாக நடக்க வேண்டுமோ அங்கு மிதமாக, கவனயீனமாக இருக்கிறோம். எங்கெல்லாம் பெற்றோருடன் சாந்தமாக நடக்க வேண்டுமோ அங்கு சீரிப்பாய்கிறோம். சில போது அவர்களுடனான உறவையே முறித்துக் கொள்கிறோம்.  இரண்டு நிலையும் தவறானது. தவறில் இருந்தால் இதமாகச் சுட்டிக்காட்ட வேண்டும் பகைக்கக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts